Archives: அக்டோபர் 2018

இருளில் நம்பிக்கை

சண்டையிடும் மாகாணங்கள் காலம் (கி மு 475-246) என்று அறியப்பட்ட காலக்கட்டத்தில் கு யுவான் என்ற விவேகமான, நாட்டுப்பற்றுள்ள சீன அரசு அதிகாரி வாழ்ந்தார் என்ற மரபுக்கதை ஒன்று உண்டு. நாட்டை அழிக்கக்கூடிய ஒரு ஆபத்து நெருங்கி வருவதாக அவர் அரசருக்கு அநேக முறை எடுத்துகூற முயன்றும், அரசர் அவர் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் கு யுவான் நாடு கடத்தப்பட்டார். தான் எந்த எதிரி குறித்து எச்சரித்தாரோ அந்த எதிரியால் தன் அன்புக்குரிய நாடு அழிந்தது என்று அறிந்தபோது, தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

சில விஷயங்களில் கு யுவானின் வாழ்க்கை எரேமியாவின் வாழ்க்கையை ஒத்திருக்கிறது. அவரது எச்சரிக்கையை ஏளனம் செய்த அரசர்களை அவரும் சேவித்தார். அவர் நாடும் சூறையாடப்பட்டது. ஆனால் கு யுவான் நம்பிக்கை இழந்துபோனார், எரேமியாவோ உண்மையான நம்பிக்கை கொண்டார். ஏன் இந்த வித்தியாசம்?

உண்மையான நம்பிக்கை அளிக்கும் ஆண்டவரை எரேமியா அறிந்திருந்தார். “உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பி வருவார்கள்” என்று கடவுள் அந்த தீர்க்கதரிசிக்கு உறுதியளித்தார். கி மு 586ல் எருசலேம் அழிக்கப்பட்டாலும், அது பின்னர் மீண்டும் கட்டப்பட்டது (நெகேமியா 6:15 பார்க்க).

நம்பிக்கை இழக்கவைக்கும் சூழ்நிலைகளை நாம் சந்திக்க நேரலாம். அது மோசமான தகவலைத் தரும் மருத்துவ ஆய்வு அறிக்கையாகவோ, பறிபோன வேலையாகவோ, சிதைந்துபோன குடும்பமாகவோ இருக்கலாம். ஆனால் வாழ்க்கை நம்மை கீழே தள்ளும்போதும், நாம் நிமிர்ந்து பார்க்கமுடியும் – ஏனென்றால் கடவுள் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்! நம்முடைய நாட்கள் அவர் கைகளில் இருக்கிறது. நம்மை அவர் இருதயத்திற்கு அருகில் வைத்திருக்கிறார்.

வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளுதல்

வேதாகமத்தை வெவ்வேறு விதமாக விளக்கம் அளிப்பதால் ஏற்படும் முடிவில்லாத விவாதங்களில் பங்கேற்காமல் வெளியேறுவது எவ்வளவு கடினமானது என்று என் தந்தை கூறக்கேட்டிருக்கிறேன். அதே சமயம், இரண்டு தரப்பினரும் அவர்களுக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது நன்றாக இருக்கும் என்றார்.

ஆனால் சமரசமடையாத வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பது சாத்தியமா? புதிய ஏற்பாட்டில், பவுல் ரோமருக்கு எழுதும் கடிதத்தில் இதற்கான பதிலைத் தருகிறார். சமூக, அரசியல், மத பிணக்கங்களில் சிக்கியிருந்த வாசகர்களுக்கு எழுதும்போது, எதிர் எதிர் நிலைமையில் உள்ளவர்கள்கூட எப்படி ஒரு பொதுவான தளத்தில் சேரலாம் என்று பரிந்துரை செய்கிறார் (14:5-6).

கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது குறித்து, நம்முடைய கருத்துக்களுக்காகவும், நம்முடைய வேறுபாடுகளில்  நாம் ஒருவரை ஒருவர் எப்படி நடத்துகிறோம் என்பதற்காகவும், நாம் கடவுளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார் (வச. 10).

நம்முடைய கருத்துக்களைவிட முக்கியமான விஷயங்கள் – நம்முடைய வேதாகம விளக்கங்களையும்விட – உண்டு என்பதை நாம் நினைவுகூர பிணக்கங்கள் உதவும். கிறிஸ்து நம்மை நேசித்ததைப்போல நாம் ஒருவரை ஒருவர் நேசித்தோமா, நம்முடைய எதிரிகளையும்கூட நேசித்தோமா என்று நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.

இப்போது யோசித்துப் பார்த்தால்,  இரண்டு தரப்பினரும், பரஸ்பர அன்பு மற்றும் மரியாதையோடு, அவர்களுக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது நன்றாக இருக்கும் என்று என் தந்தை கூறியது நினைவுக்கு வருகிறது.

நன்றி மனப்பான்மையைப் பற்றிகொளல்

தீராத வலி, நடக்க முடியாமல் பட்ட கஷ்டம் ஆகியவற்றால், பல ஆண்டுகளாக நான் அடக்கி வைத்திருந்த சலிப்பும், விரக்தியும் வெளிவரத் தொடங்கின. என்னுடைய அதிருப்தியின் காரணமாக அதிகமாக அதிகாரம் செய்பவளாக, நன்றி இல்லாதவளாக மாறினேன். என்னுடைய கணவர் என்னை நன்றாக கவனித்துக்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினேன். அவர் வீட்டை சுத்தம் செய்தது சரியில்லை என்று குறை சொன்னேன். அவர் மிக அருமையாக சமைப்பார் என்றாலும், வித விதமாக சமைக்கவில்லை என்று புலம்பினேன். நான் அதிருப்தியாக இருப்பது அவரை அதிகமாக காயப்படுத்துகிறது என்று அவர் சொன்னபோது, நான் கோபம் கொண்டேன். நான் படும் அவஸ்தை அவருக்குப் புரியவில்லை. ஆனால் கடைசியில் கடவுள் என் தவறுகளை எனக்குப் புரியவைத்தார். நான் கடவுளிடமும், என் கணவரிடமும் மன்னிப்புக் கேட்டேன்.

வித்தியாசமான சூழலுக்காக ஏங்குவது, குறைசொல்லும் குணத்தை அல்லது, உறவுகளை சிதைக்கும் சுயநலத்தை நம்மில் ஏற்படுத்தும். இஸ்ரவேலர்களுக்கு இந்தத் தடுமாற்றம் பரிச்சயமான ஒன்று. அவர்கள் எப்போதும் திருப்தி அடையாமல், கடவுள் கொடுத்ததைக்குறித்து முறுமுறுத்தார்கள் (யாத்திராகமம் 17:1-3). கடவுள் “வானத்திலிருந்து அப்பம்” (16:4) வருஷிக்கப்பண்ணி, தம் ஜனங்களை போஷித்தாலும், அவர்கள் மற்ற உணவுகளுக்காக ஏங்க ஆரம்பித்தார்கள் (எண்ணாகமம் 11:4). கர்த்தரின் அன்பையும், பராமரிப்பையும் வெளிப்படுத்தும் அன்றாட அற்புதங்களைக் குறித்து சந்தோஷப்படாமல், இஸ்ரவேலர்கள் இன்னும் அதிகமாக, நல்லதாக, வித்தியாசமானதாக, தாங்கள் முன்னே சாப்பிட்டதுகூட (வச. 4-6) வேண்டும் என்றார்கள். தங்களுடைய விரக்தியை அவர்கள் மோசேயிடம் காண்பித்தார்கள் (வச. 10-14).

கர்த்தரின் நற்குணத்தையும், விசுவாசத்தையும் நம்புவது, நமக்கு நன்றி மனப்பான்மையைத் தரும். எண்ணற்ற வழிகளில் நம் மேல் அக்கறை காட்டி, நம்மை பாரமரிப்பதற்காக அவருக்கு நாம் இன்று நன்றி சொல்வோம்.

என் சித்தம் அல்ல, உம் சித்தம்

கமில், ஜோயெல் தம்பதியின் எட்டு வயது மகள் ரீமா ஒரு அரிய வகை இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று தெரிந்தபோது அவர்கள் உள்ளம் உடைந்துபோனார்கள். இந்த புற்றுநோயின் காரணமாக, ரீமாவுக்கு மூளைக்காய்ச்சல் வந்து, பின்னர் பக்கவாதம் வந்து, இறுதியில் கோமா என்ற ஆழ்மயக்க நிலைக்குச் சென்றாள். மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழு, அவள் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கி, அவள் பிழைப்பதற்கான சாத்தியம் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவு என்று சொல்லி, ரீமாவின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார்கள்.

கமிலும், ஜோயெலும் ஒரு அற்புதத்திற்காக உபவாசம் இருந்து ஜெபம் செய்தார்கள். “முடிவு எதுவாக இருந்தாலும், நாம் கடவுள்மேல் நம்பிக்கை கொள்ளவேண்டும். மேலும் ‘என் சித்தமல்ல, உம் சித்தம்’ என்று இயேசுவைப்போல ஜெபிக்கவேண்டும்” என்று கமில் சொன்னார். “ஆனால் கடவுள் அவளை சுகப்படுத்த வேண்டும் என்றே நான் மிகவும் வாஞ்சிக்கிறேன்” என்று ஜோயெல் கூறினார். “ஆம்! நாம் கேட்போம். ஆனால் இயேசு செய்ததுபோல, நம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுப்பது மிகவும் கடினம் என்றாலும், அப்படிச் செய்வதே கடவுளை கனம்பண்ணுவதாகும்” என்று கமில் கூறினார்.

சிலுவையில் அறையப்படும் முன், “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்” (லூக்கா 22:42). “இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்” என்று ஜெபித்ததால், சிலுவையில் அறையப்பட வேண்டாம் என்றார்; ஆனால் பிதாவின்மேல் உள்ள அன்பின் காரணமாக, பிதாவின் சித்தத்துக்கு தன்னை ஒப்புவித்தார்.

நம்முடைய ஆசைகளை கடவுளிடம் ஒப்புவிப்பது எளிதல்ல. கஷ்டமான தருணங்களில், அவருடைய ஞானத்தை புரிந்துகொள்வதும் எளிதல்ல. கமில், ஜோயெல் தம்பதியின் ஜெபத்திற்கு மிகவும் விசேஷித்த வகையில் பதில் கிடைத்தது. ரீமா இன்று ஆரோக்கியமான 15 வயது பெண்ணாக இருக்கிறாள்.

கடவுள் நம்முடைய ஒவ்வொரு கஷ்டத்தையும் புரிந்துகொள்கிறார். அவருடைய வேண்டுதல் நமக்காக கேட்கப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு தேவையின்போதும், எப்படி கடவுள்மேல் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று நமக்குக் காண்பித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஆனந்த கண்ணீர்

ஓர் நாள் காலையில் வீட்டை விட்டு வெளியேறிய டீன், தன்னுடைய சில நண்பர்கள் பலூன்களுடன் காத்திருந்ததைக் கண்டார். அவனுடைய நண்பன் ஜோஷ் முன்பாக வந்து, அவனிடத்தில் ஒரு கவரை கொடுப்பதற்கு முன்பாக, “உன்னுடைய கவிதைகளை ஓர் போட்டிக்கு அனுப்பி வைத்தோம்” என்றான். அந்த கவரின் உள்ளே “முதல் பரிசு” என்று எழுதப்பட்ட ஓர் அட்டை இருந்தது. விரைவில் அனைவரும் சேர்ந்த ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். டீனின் நண்பர்கள் ஓர் அழகான காரியத்தைச் செய்து, அவருடைய எழுத்துத் திறமையை உறுதிப்படுத்தினர்.

மகிழ்ச்சிக்காக அழுவது ஓர் முரண்பாடான அனுபவம். கண்ணீர் பொதுவாக வலிக்கான பதில், மகிழ்ச்சி அல்ல. மகிழ்ச்சி பொதுவாக சிரிப்புடன் வெளிப்படுத்தப்படுகிறது, கண்ணீரினால் அல்ல. இத்தாலிய உளவியலாளர்கள், நாம் ஆழமாக நேசிக்கப்படுவதை உணரும்போது அல்லது ஓர் முக்கிய இலக்கை அடையும்போது, ஆழ்ந்த தனிப்பட்ட அர்த்தத்தின்போது மகிழ்ச்சியின் கண்ணீர் வரும் என்று குறிப்பிட்டுள்ளனர். மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்வின் அர்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது என்ற முடிவுக்கு இது வழிவகுத்தது.

இயேசு சென்ற இடமெல்லாம் ஆனந்தக் கண்ணீர் பெருகுவதை நான் கற்பனை செய்கிறேன். குருடனாகப் பிறந்தவனின் பெற்றோர் இயேசு அவனைக் குணமாக்கியபோது (யோவான் 9:1-9), அல்லது மரியாள் மற்றும் மார்த்தாள், தங்கள் சகோதரனை மரணத்திலிருந்து எழும்பிய பிறகு (11:38-44) மகிழ்ச்சியில் அழாமல் எப்படி இருந்திருக்கக்கூடும்? தேவனுடைய ஜனம் ஓர் மறுசீரமைக்கப்பட்ட வாழ்க்கைக்கு கொண்டுவரப்படும்போது, “அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழி நடத்துவேன்” (எரேமியா 31:9) என்று தேவன் சொல்லுகிறார். 

மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்க்கையின் அர்த்தத்தை நமக்குக் காட்டினால், வரவிருக்கும் அந்த மகிமையான நாளை கற்பனை செய்துபாருங்கள். நம் முகங்களில் கண்ணீர் வழியும்போது, அவருடன் நெருக்கமாக வாழ்வதே வாழ்க்கையின் அர்த்தம் என்பதை சந்தேகமின்றி அன்று நாம் அறிவோம்.

 

விசுவாசத்தின் ஜெயம்

நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!" என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.

அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர். 

தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது... காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார். 

வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம்.

 

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.